வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சுமார் 1லட்சத்து 46 ஆயிரம் பேர் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய
இராயப்பு ஜோசப் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக லங்கா எவ்ரிதிங் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தேசிய கணக்கெடுப்பின் போது காணப்பட்ட மக்கள் தொகைக்கும், யுத்த காலத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கூறப்படுகின்ற மக்கள் தொகைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்த போது அவர் இராயப்பு ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெளிவு படுத்த வேண்டிய கடமை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் தகவல்படி, 2008ம் ஆண்டு 429 ஆயிரத்து 59 பேர் வன்னியில் தங்கி இருந்துள்ளனர்.
எனினும் 2009ம் ஆண்டு ஜுலை மாதம்; ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் படி இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 380 வன்னி மக்களே இருப்பதாக தெரியவருகிறது.
எனவே எஞ்சிய மக்கள் தொகைத் தொடர்பில் இராயப்பு ஜோசப் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.
| < முன் | அடுத்தது > |
|---|




