மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கடும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ள களுவாஞ்சிக்குடி பிரதேச
செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தினால் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலத்துக்குட்பட்ட பகுதிகளில் 27 முகாம்களில் சுமார் 3150 குடும்பங்களை சேர்ந்த 11,100பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து கிராமங்களிலும் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா தெரிவித்தார்.
இதில் களுவாஞ்சிக்குடி, மகழூர், எருவில், குருமண்வெளி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறை நீலாவணை ஆகிய பகுதிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இப்பகுதிகளில் விவசாய பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் தோட்டங்கள் என்பனவும் முற்றாக அழிந்துபோயுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள முகாம்களுக்கு சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் மேற்கொள்ளப்படும் உணவு வழங்கல் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
அத்துடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கேற்ப முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
| < முன் | அடுத்தது > |
|---|




