தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. இதன் போது மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக தாம் முன் வைத்த
பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதில்களை வழங்கியதாகவும், யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலை,கொள்ளைகளை இல்லாது ஒழிப்பதற்காக ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ சுமந்திரன் ஒன்லைன் உதயனுக்குத் தெரிவித்துள்ளார் . தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்ட விவரங்களைச் சொன்னார்.
அரசாங்கம் ஆயுத களைவுக்கு முழு உடன்பாடு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆயுதக் குழுவுக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை ஒன்று வழங்கப்படும் அந்தக் கால எல்லைக்குள் ஆயுதங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரச தரப்பு தெரிவித்ததாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் போரின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முன்னாள் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு கோரியதற்கிணங்க வவுனியாவில் வைத்து இந்த பெயர் விபரங்களை வெளியிட தீர்மானித்துள்ளதாக அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனை உறவினர்கள் வந்து பார்க்கும் வகையில் விரைவில் அறிவித்தல் விடுக்கப்படும் என்றும் அரசாங்க தரப்பு தமிழ்தேசியக்கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளது.
உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பாகக் கேட்டபோது அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதே நேரம் அரசியல் தீர்வு தொடர்பாகவும் இன்று பேசப்பட்டது. இது விடயத்தில் ஒழுங்கான ஒரு அட்டவணையின் கீழ் அந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது என்ற தீhமானத்துடன் எதிர்வரும் மார்ச் முதலாம் வாரத்தில் மீண்டும; சந்திப்பதற்கு இரு தரப்பும் இணங்கியதாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
| < முன் | அடுத்தது > |
|---|




