'ஏழ்மை முழுமையாய் அகலட்டும்'' என்று தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா : அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை
உவகையுடன் கொண்டாட இருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பை அறுவடை செய்து, செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், பலன் பெறக் காரணமாக இருந்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி நவிலும் விழா பொங்கல் பெருவிழா. சாதி மத வேறுபாடு இன்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் அனைவராலும் கொண்டாடப்படும் விழா தமிழர் திருவிழாவான பொங்கல்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழரின் தன்மானம் தனித் தன்மையோடு திகழ, தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, சர்வாதிகார ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால் போல் பொங்கி வழிய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
| < முன் | அடுத்தது > |
|---|




